Thursday, August 19, 2010

ஐ. நா நோக்கி நகரும் கால்களுக்கு வலுச் சேர்ப்போம்



சிவந்தனை வரவேற்கத் தயாராகும் சுவிஸ் மக்கள், ஜெனீவா நோக்கி அணிதிரளும் ஐரோப்பிய மக்கள்

தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி இன்று 27வது நாளாக சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.

மலைப்பாங்கான பிரதேசங்களில் சிவந்தன் நடந்து செல்வதால், நேற்று சுவிற்சர்லாந்து எல்லைக்குள் சென்ற போதிலும், மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்குள் சென்று ஜெனீவா நோக்கி பிரான்ஸ் நாட்டிற்குள் நடந்து செல்லுகின்றார்.

நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10:00 மணியளவில் மீண்டும் சுவிஸ் எல்லைக்குள் பேர்லி (Perly) என்ற இடத்தில் சிவந்தன் நுழையும்போது, அவருக்கு பாரம்பரிய இசைமுழங்க, நாட்டியங்களுடன் செங்கம்பள வரவேற்பு அளிக்க சுவிஸ் தமிழ் அமைப்புக்களும், தமிழ் சமூகமும் ஏற்பாடு செய்துள்ளன.

950 இற்கும் மேற்பட்ட கிலோமீற்றர்கள் நடந்து சென்றுள்ள சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 30 கிலோமீற்றர்கள்வரை மட்டுமே நடக்க வேண்டியுள்ளது.

சிவந்தனுடன் சுவிற்சர்லாந்தில் இருந்து சென்றவர்கள் உட்பட 15 பேர் இணைந்து நடந்து செல்லுகின்றனர்.

இவர்கள் நடந்து செல்லும் வழிகளில் தமிழ் மக்களின் நிலை மற்றும் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கல் செய்யப்பட்டு, பிரெஞ்சு மற்றும் டொச் மக்களிற்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, சிவந்தனது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து சுவிற்சர்லாந்து சூரிச்சில் இருந்து ஜெனீவா நோக்கிய 300 கிலோமீற்றர் தூர மனிதநேய நடை பயணத்தை தமிழின உணர்வாளர்கள் மூவரும் இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈகப்பேரொளி முருகதாசன் திடலிலான ஐ.நா முன்றலில் இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால், அதில் கலந்துகொள்ள ஐரோப்பிய தமிழர்கள் அணிதிரண்டு வருகின்றனர்.

  • சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
  • தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
  • மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் மேற்கொண்டு வருகின்றார்.

Blog Archive